தமிழ்செல்வி... அவள் பேசும் தமிழ்தான் தமிழ் மொழியின் செல்வம்.
ஆம்... அம்மா, அப்பா என்று ஓரிரு வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்த அந்த செங்கரும்பு தற்போது சுவையான தமிழின் அனைத்து வார்த்தைகளையும் ஒரு கை பார்க்கிறது.
எந்த வார்த்தையையும் விட்டுவிடுவதில்லை. ஒரு முறை அல்ல பல முறை முயற்சி செய்து விட்டுத்தான் அடுத்த வார்த்தை. அவளது பெயரை இமிழ் என்பது வரை உச்சரிப்பு முயற்சிகள் நீள்கின்றன.
ஆம் ஓயாமல் இசைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் மொழியை அவளது வாய்மொழி.
நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த வாக்கியத்தில் அவளுக்குப் பிடித்த வார்த்தையை தேர்வு செய்து அதனை உச்சரித்துப் பார்த்து வெற்றி கண்டால் கை தட்டி மகிழ்கிறாள். நம்மையும் மகிழ்விக்கிறாள்.
அம்மா, ஆடு, இலை, ஈ இவைதான் அவளது தற்போதைய கற்றல்கள். இதெல்லாம் கற்பிப்பவை என்பது தெரியாததால் அவள் கற்றுக் கொண்டால். நாம் சொல்லிக் கொடுக்க முயன்றால் அந்த வார்த்தை அவளது வாயில் இருந்து எந்த நாளும் வெளிவராது. அவ்வளவு வீம்பு.
எங்கு விளையாடிக் கொண்டிருந்தாலும் நாம் பேசுவதில் அவளது முழுக் கவனமும் இருக்கிறது. அவளைப் பற்றிய பேச்சாக இருந்தால் போதும், நாம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அதை அவள் அங்கு செய்து கொண்டிருப்பாள் அது நிச்சயம்.
செல்பேசியை எடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தபடி பல அர்த்தமற்ற வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவாள். முடிவில் ஒரு சிரிப்பையும் தெளிக்க மறப்பதில்லை அவள்.
ஒரு முறை மஸ்கட்டில் இருந்து அவள் சித்தப்பா செல்பேசியில் தொடர்பு கொண்டிருந்தபோது, செல்பேசியைப் பிடுங்கி அவர் பேசுவதைக் கேட்ட பின் பதிலுக்கு இவள் பேசுவதும், இவள் பேசுவதைக் கேட்டு அவர் சிரிப்பதைக் கேட்டு இவளும் பதிலுக்கு சிரித்ததையும் சொல்லி சொல்லி இன்னும் அலுக்கவில்லை. இதோ உங்களிடமும் சொல்லிவிட்டாச்சு.
ஒரு சிறு திருட்டுப் பார்வை, குறும்பு சிரிப்பு, தவறு செய்ததும் மன்னிப்புக் கேட்கும் சுபாவம், அடித்துவிட்டு அதே நொடியில் கிள்ளி முத்தும் கொடுத்து ஆளை மயக்கும் வித்தை என அனைத்தும் கற்ற அவள் இல்லை என்றால் வாழ்க்கையில் நாங்கள் சிரிக்க காரணமே இருந்திருக்காது.
|