சரி.. தலைப்பை கடைசி வரியா வச்சி முடிச்சிக்கலாம்.
என்னுடைய அலுவலக தோழி ரம்யாவிற்கு பிறந்த நாள்.. இதை பெரிய(?!) அளவில் கொண்டாடும் வகையில், ரம்யா, ஷீபா, நான் மூவரும் சென்னையில் உள்ள பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டலுக்கு மதிய உணவு உண்ண சென்றோம்.
5 ஸ்டார் ஹோட்டல் என்பது சற்று பரிச்சயமானதுதான் என்றாலும், அவ்வளவாக விஷயம் தெரியாது.
மூவரும் ஒரு மேஜையைத் தேர்ந்தெடுத்து அங்கு போய் அமர்ந்தோம். ஒரு மதிய உணவு அங்கு ரூ.500, எனவே மூவருக்கும் 1,500. நாம ஏதாச்சும் வெரைட்டியா சாப்பிடலாம் என்று எண்ணி ஒரு வெஜ் பிரியாணியை மட்டும் ஆர்டர் கொடுத்தேன். அதன் விலை 300ரூ. சரி 200 ரூபாயை மிச்சம் பிடித்தாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தோம்.
அப்போது, எங்கள் மேஜையில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை (ஏதோ ஒரு நிறுவனத்தின் தண்ணீர்) அங்கிருக்கும் பணியாள் வந்து இதையே வைக்கட்டுமா அல்லது வேறு கொண்டு வரவா என்று கேட்டார். எங்களுக்குப் புரியவில்லை. சரி வேறு கொண்டு வாருங்கள் என்று நாங்களும் கூறிவிட்டோம். (இதுதான் நாங்கள் செய்த ஒரே தவறு).
நல்ல சாப்பாடு. சொல்லப்போனால் அவர்களது சாப்பாட்டை (ஐஸ், ஸ்வீட், சாலட், சூப்) நானும் ஒரு பிடி பிடித்தேன். பிரியாணி ஒரு சிறிய பானையில் அப்படியே செய்து சுடச்சுட கொண்டு வந்து பரிமாரினார்கள்.
தோழிகள் இருவரும் எழுந்து போய் பஃபே சிஸ்டம் முறையில் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வந்து கொடுக்க, நானோ உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தையும் சாப்பிட்டு முடித்தேன்.
கடைசியாக பில் வந்தது. பில்லை பார்த்ததும் எங்களுக்கு ஷாக். என்னடா இது ஒரு மதிய சாப்பாடு 500 ரூபாய்னு சொல்லும் போது வராத ஷாக் இப்போ எங்கே இருந்து வந்ததுன்னு நீங்க கேக்கலாம்.
வந்ததே... என்னவென்றால்... பணியாள் வந்து மாற்றி வைத்தானே அந்த தண்ணீர் அது 350 ரூபாயாம். ம்ம்ம்.. நான் சாப்பிட்டதே 300 ரூபாய் பிரியாணி. தண்ணீர் 350ஆம்.
எப்படி இருக்கும் எங்களுக்கு... என்ன செய்வது.. கண்ணீர் விட்டு அழுதுகொண்டே காசைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினோம்.
இனி 5 ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தா நிச்சயம் தண்ணியோடத்தான் வரணும். இல்லனா இப்படி கண்ணீரோடத்தான் போகணும்னும் முடிவு கட்டினோம்.
தண்ணி காட்டிட்டாங்கய்யா...
நினைவேறுகிறது…
மறுமொழிகள்