நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை உணர்வுப் பூர்வமாக விளக்கும் கதை இது.
வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறையில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும்
45 வயதுடைய அவர்களின் மகனும் தனது கணினியில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
‘என்ன இது?’ என்று கேட்டார் முதியவர்.
கணினியில் இருந்து கண்களை விளக்காமல் மகன் சொன்னார், ‘அது ஒரு காகம்‘
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், ‘என்ன இது?’
‘இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்‘ என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், ‘என்ன இது?’
சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், ‘அது ஒரு காகம், காகம்!‘
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், ‘என்ன இது?’
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், ‘அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்‘ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?’ சே என்று திட்டினான்.
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.
அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த அந்த வயதான தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
‘எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன‘ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்‘ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது‘ என்று முடித்திருந்தார்.
இதைப் படித்த மகனின் கண்கள் நீர் திவளைகளால் நிறைந்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.
நன்றாக யோசித்துப் பாருங்கள். வேண்டாம், இந்த விஷயம் நாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே புரிந்து விடும், நமது மகன் அல்லது மகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்காவது நமது பெற்றோருக்கு அளிக்கிறோமா? நாம் நமது குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்த்தது போலத்தானே நமது பெற்றோரும் நம்மை வளர்த்திருப்பார்கள். இன்று நீங்கள் வளர்ந்துவிட்டதால் அவர்களது உதவி உங்களுக்குத் தேவையில்லை, அதனால் அவர்களை உதாசீனப்படுத்துகிறீர்கள்.
அவர்களுக்கு உங்களது உதவி தேவைப்படும் நேரம் இது. அதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இப்போது உங்கள் பெற்றோருக்கு என்ன செய்கின்றீர்களோ அதுதான் நாளை உங்களுக்கும். நல்லதும், கெட்டதும் உங்கள் கையில்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்