Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

மறை‌ந்த திருப்பதிசாமி!



‌‌பல ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு விஜயகா‌ந்தை வை‌த்து நர‌சி‌ம்மா எ‌ன்ற பட‌த்தை எடு‌த்து முடி‌த்து அது வெ‌ளிவருவத‌ற்கு‌ள் ‌விப‌த்து ஒ‌ன்‌றி‌ல் ‌சி‌க்‌கி உ‌யி‌ரிழ‌ந்த இய‌க்குந‌ர் ‌திரு‌ப்ப‌திசா‌மி ப‌ற்‌றி அவரது ந‌ண்ப‌ர் கெளத‌ம் எ‌ன்பவ‌ர் எழு‌திய க‌விதை பு‌த்தக‌ம் இது.

எ‌ன்னவோ ஏதோ என‌க்கு‌த் தெ‌ரியாது... இதை‌ப் படி‌த்த ‌பிறகு ‌திரு‌ப்ப‌திசா‌மி எ‌ன‌க்கு‌ம் ந‌ண்பராக இரு‌ந்ததை‌ப் போ‌ன்று உண‌ர்‌ந்தே‌‌ன். பல ஆ‌ண்டு காலமாக இ‌ந்த க‌விதையை அ‌வ்வ‌ப்போது படி‌க்கு‌ம் வழ‌க்க‌த்தை‌க் கொ‌ண்டு‌ள்ளே‌ன். இதனை மன‌ப்பாடாமாக ஒ‌ப்‌பி‌க்கவு‌ம் எ‌ன்னா‌ல் முடியு‌ம்.

அ‌வ்வளவு‌ப் ‌பிடி‌த்த இ‌ந்த க‌விதையை உ‌ங்களுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌‌கிறே‌ன்.

‌ரொ‌ம்ப பெ‌ரியதாக இரு‌‌ந்ததா‌ல் ‌சிலதை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டே‌ன். ம‌ன்‌னி‌க்கவு‌ம் கெளத‌ம்.

ஐந்து வயது
குழந்தை கேட்கிறது . . .
"அப்பா சொல்றது
உண்மையாம்மா?
எப்போதோ
எதற்கோ
சொல்லிக் கொடுப்பதை
எனக்கே சொல்கிறது. . .
"திருப்பதி அங்கிள்
சாமிகிட்ட போயிருக்காங்க.
திரும்பவும் வருவாங்க.
குட்டிப் பாப்பாவா பிறப்பாங்க.
நான் சொன்ன பொய்தான்,
நானே நம்புகிறேன்!

திருப்பதிசாமி. . .
அவன் என் உயிர் நண்பன்.
ஓடும் ரயிலில்,
ஒரு நிமிடம் பேசியிருந்தாலும்
உங்களுக்கும்
அவன் உயிர் நண்பன்.
இப்போது உயிர். . . ?

நிறைய முகங்கள் அவனுக்கு.
சட்டம் படித்தவன்.
எது பேசினாலும்
அனல் பறக்கும்.
அவனோடு வாதாடி ஜெயிக்க
எவனாலும் முடியாது,
எமனால். . .!

நிறைய முகங்கள் அவனுக்கு.
கம்பன் கழகம் கடந்த
கல்லூரி மாணவன்.
இயற்கையிலேயே
இலக்கிய ரத்தம்!

முண்டாசுக் கவி பாரதி
அவனது
ஆதர்ஷ புருஷன்.
`முப்பத்தொன்பது வயசுக்குள்ள
சாதிச்சுப்புட்டானே படவா'
என்பான்.
முப்பத்தியிரண்டில் அவன்
சாதிக்க ஆரம்பித்த நேரத்தில். . .!

நிறைய முகங்கள் அவனுக்கு.
உண்மையும்
வலிமையும் கலந்து
பேனா பிடித்த பத்திரிகையாளன்.
அவன் எழுதிக் கிழிந்த முகமூடிகள்
ஏராளம்.

வஞ்சனையில்லாமல்
அவன் தரும் உற்சாகம்
தாராளம்.
`மெரீனா பீச்சை
விலைக்கு வாங்கப் போகிறேன்'
என்றால் கூட
`உன்னால் முடியும் என்பான்.’

தினம் தினம்
பத்துப் பதினைந்து தரமாவது
அவன் கேட்கும்
இளையராஜாவின்
`இந்தமான், உந்தன் சொந்தமான்'
பாடலை
இருவருமாய்க் கேட்கவேண்டும்.
இதற்கும் சொல்லடா திருப்பதி. . .
`உன்னால் முடியும்' என்று

தலைமைச் செயலகத்துக்கு எதிரே
அந்த ஒற்றை மரத்தைக்
காட்டிச் சொன்னான். . .
`எனக்குப் பிடித்த இடம்டா
இந்த மர நிழல்!'

அவன் மரித்த நிமிடம்
பார்த்த மரம்,
இப்போதும் இருக்கிறது
அதே இடத்தில் - உயிரோடு!

நிறைய முகங்கள் அவனுக்கு.
முதல் படத்துக்கே ( கணேஷ் )
விருதுகள் வென்றெடுத்த
சினிமாக்காரன்.
கதை சொல்லச் சொல்லி
கண்மூடிக்
கொண்டால் போதும்
படம் ஓடும்.

தமிழில் முதல் படம் நரசிம்மா.
தயாரிப்பில் இருக்கும்போதே
வியக்கிறது திரையுலகம்.
அதனாலும்தான். . .
கண்ணீரும் கதறலுமாய்
திரண்டது கோடம்பாக்கம்.
அவனுக்காக கூடியவர்களை
அவன் பார்க்க முடியாதது
சோகம்.

வெற்றிக்கு
விழ வேண்டிய மாலைகள்
வழியனுப்பக் குவிந்தது
பாவம்!

நிறைய முகங்கள் அவனுக்கு.
தெரிந்தார்க்கினியன்.
நல்ல நண்பன்.
பரபரப்பு அவனை
பற்றியிராத காலம்.
அவனையும் சேர்த்து
ஏழெட்டு பேராகும்.
பேச்சிலர்ஸ் பாரடைஸ்.
ஞாயிற்றுக் கிழமைகளில்
அறை களை கட்டும்.
ஆட்டம், பாட்டு, சண்டை. . .
ஆம்.

மோதலால் காதலானவர்கள்தான்
அவனுக்கு அதிகம்.
சிண்டைப் பிடிக்காத குறையாக
சண்டைகள் உண்டு.
ஆனால். . .
வெளியே பேசும்போது
விட்டுக் கொடுக்கவே மாட்டான்.
இப்போது விட்டுவிட்டுப். . .

நிறைய முகங்கள் அவனுக்கு.
பொறுப்பான பிள்ளை.
பாண்டிச்சேரியிலிருந்து போன். . .
விஷயத்தை
வெளியே சொல்லவில்லை.
அவனும் நானும்
அப்பா அம்மாவை
அழைத்துக்கொண்டு போகிறோம்.
வழியோடு வலியாக
கொஞ்சம் கொஞ்சமாக
சேதி சொல்கிறோம்.
தெருமுனை வந்ததும்தான்
அக்கா
இறந்ததைச் சொல்கிறோம்.

யானைக்கு மணியாக
வழிநெடுக
அவன் கொடுத்த
வார்த்தை ஒத்தடம்
இப்போது கிடைக்குமா
அவனை இழந்து
துடிக்கும் பெற்றோருக்கு?

அவன் அழைத்தபோதெல்லாம்
வர முடியாத குருநாதர்
சுரேஷ்கிருஷ்ணா
ஓடிவந்து
உடைந்து கிடக்கிறார்.

பதினாறடி பாய இருந்த குட்டி.
நேற்று தான்
குருவைச் சந்தித்து
கால்களில்
விழுந்து வந்திருக்கிறான்.
ஆசிர்வாதம் செய்து அனுப்பியவருக்கு
அதிகாலையில் அதிர்ச்சி!

நேற்று இரவு
அவனைச் சந்திக்க முயன்று
`வேண்டாம் திருப்பதி.
நாளைக்குப் பார்க்கலாம்' என்று
போன் பேசிவிட்டுப் போன
நண்பர்கள் அலறுகிறார்கள். . .
"ஒரு வேளை
நேற்று சந்தித்திருந்தால்
உன் வழியும்
மாறியிருக்குமே நண்பா"

படம் ரிலீஸானதும்
பப்ளிசிட்டிக்குப் பயன்படுத்தலாமென
போன மாதம்
எடுத்த போட்டோக்களை
நாளிதழ் நிருபர்களுக்கு
இறுக்கத்துடன் கொடுக்கிறான்
இன்னொரு நண்பன் -
புகைப்படக்காரன்.

`ஆள்
அழகாகத்தான் இருக்கான்.
படத்தில் நடிக்கலாமே' என
ஷங்கர் சொன்னதை
அவனிடம் சொல்லியதையும்,
வெட்கத்துடன்
அவன் குதூகலித்ததையும்
மாய்ந்து மாய்ந்து கூறுகிறான்
வேறொரு நண்பன்.

"ஏம்ப்பா அவனுக்கு
திருப்பதிசாமின்னு
பேர் வச்சீங்க.
அந்த சாமியே
அவனை எடுத்துக்கிச்சே" என
கதறிக் கரைகிறாள் சகோதரி.

கடைசி நிமிடத்துக்கு
முந்தைய நிமிடங்களிலும்
உடனிருந்த உதவியாளர்கள்
புலம்புகிறார்கள். . .
"போன வாரம் முழுக்க
பார்க்கிற ஆள்கிட்ட எல்லாம்
பிறப்பு, வாழ்வு, மரணம்
இதப்பத்தித்தான் பேசினார்"

எல்லோருக்கும்
தாமதமாகத் தெரிந்தது
அவனுக்கு மட்டும்
முன்பே தெரிந்திருக்கிறது!

எல்லாம் சொல்லியிருக்கிறான்
என்னிடம்.
கற்பு பறிபோகாமல்
தப்பி வந்த
கதை சொல்லியிருக்கிறான்.
கனவுப் படம் குறித்த
ஆசை சொல்லியிருக்கிறான்.
உள்ளுக்குள் ஒரு காதல்
மலர்ந்தது
உதிர்ந்ததைச் சொல்லியிருக்கிறான்.
`எடுத்தவரை நரசிம்மா
கேப்டனுக்கும் பரம திருப்தி'
என்று சொல்லியிருக்கிறான்.
வீடு கட்டியபின்தான்
தாலி கட்டவேண்டும்
என்பதைச் சொல்லியிருக்கிறான்.
பெண் பார்க்கச்
சொல்லியிருக்கிறான்.

ஜுலை 5-ம் தேதி
படம் ரிலீசானதும்
ஒவ்வொரு தியேட்டராகப் போய்
பரபரப்பைப்
பார்க்கலாமென்று சொல்லி
இருக்கிறான்.

உறக்கம் கலையும்வரை
காத்திருக்கிறேன் தோழா!
அதுவரை. . .
உனது நினைவுகளுடனும்
நமது நிழல்களுடனும்
நிஜமாயிருக்கிற உறவுகளையாவது
உயிருடன் வைத்திருக்கிறேன்.

கண்ணுக்கு எட்டும் வரை கடல்,
காதுகளைக் கிழிக்கும் அலை இரைச்சல். . .
கடற்கரையில் காலாற நடந்தால்கூட
கால்தடம் அப்படியே இருக்கும் - அடுத்தஅலை
வரும்வரை.

முப்பத்தி இரண்டு வருடம் கடந்த
அந்த இளைஞனின் கனவுகளும் கற்பனைகளும்
சோதனைகளும் சாதனைகளும்
எண்ணங்களும் எழுத்துக்களும்
ஒரே இரவில் கரைந்து காணாமல்போக
அனுமதிக்கலாமா!

வானத்தை வலைபோட்டு பிடிக்கும் முயற்சிதான். . .
எட்டும்வரை எட்டட்டுமே,
நண்பன் திருப்பதிசாமியின் நினைவாக
மலர் ஒன்று வெளியிட ஒன்றுபடலாம்!

என் கருத்துக்கு
உயிர்கொடுக்க முன்வரும் நண்பர்களுக்கு
உடல், பொருள், எழுத்து. . . என
என்னாலானதைக் கொடுக்கக் காத்திருக்கிறேன். . .

------------------------------------

ஜி. கௌதம்
கே.கே.நகர், சென்னை - 600 078.

மறுமொழிகள்

Re: மறை‌ந்த திருப்பதிசாமி!
wiil you mind putting the full poem instead of cutting it for being to long i will really appreciate it thankyou so much
கைதுறப்பு