அதாவது சமீபத்தில் ஒரு தனி மனிதரால் உருவாக்கப்பட்டு சீக்கிரத்திலேயே மக்களிடையே மிகப் பிரபலமான (நல்ல விஷயங்கள் அவ்வளவு எளிதில் பிரபலமாகாது) ஒரு கோயிலை (பொதுவாக அப்படி அழைக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு மட்டும் அப்படி போட்டுவிடுகிறேன். பல்லைக் கடித்துக் கொண்டு) பற்றியதுதான் இந்த கட்டுரை.
அதாவது, வேலூர் மாவட்டத்தில் பொற் (கோயில்) காட்சியைப் பற்றித்தான் கூற வருகிறேன். என்னிடம் நிறைய பணம் இருக்கிறது, அதனை நல்ல வரும்படி வரும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறேன் என்று அங்குள்ள அந்த அம்மா (அங்கிருக்கும் சாமியார் அப்படித்தான் போட்டுக் கொண்டுள்ளார். அம்மா அவதாரம் எடுத்திருக்கும் இரண்டாவது சாமியார்) யாரிடம் யோசனை கேட்டாரோத் தெரியவில்லை. யோசனை கூறியவருக்கு அடுத்ததாக கோயில்தான் கட்ட வேண்டும். அப்படி ஒரு யோசனை கொடுத்து உருவானதுதான் இந்த பொற்காட்சியாக இருக்கும்.
சில மைல் பரப்பளவு கொண்ட இடத்தில் ஒரு கோபுரத்தை அமைத்து அதனை தங்கத் தகட்டால் பதித்துவிட்டார் அந்த அம்மா. பொற்காட்சியைச் சுற்றி விதவிதமான செடிகள், பூங்காக்களைப் போன்ற அமைப்பை உருவாக்கியும் விட்டார்.
பொற்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக ஆந்திராவில் உள்ள மிக மிக பிரசித்திபெற்ற அந்த பெருமாள் கோயில் நினைவுக்கு வரும். அதனை அப்படியே ஈ அடித்தான் காபி போட்டுள்ளது இந்த பொற்காட்சி.
நுழைவாயிலுக்கும், அந்த பொற்கோபுரத்திற்கும் சில கி.மீ. தொலைவு உள்ளது. அங்கு செல்லும் பயணிகள் அந்த தூரத்தை நிச்சயம் கடந்து சென்றுதான் பார்க்க முடியும் பொற்கோபுரத்தை.
சரி நுழைவாயிலில் நமக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது தெரியுமா... 3 மணி நேர பொது தரிசனம். அதாவது அந்த தரிசனம் முடிந்து வெளியே வர 3 மண நேரம் ஆகுமாம். இது என்ன விந்தை, பொதுவாக இப்படி இத்தனை மணி நேரமாகும் என்று எங்கும் எழுதப்பட்டிருக்காதே, இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று யோசித்தால், சிறப்பு தரிசனத்திற்கு 100 ரூபாய் கட்டணம் என்று கேள்விப்பட்டதும் விடை கிடைத்தது.
பொது தரிசனம் 3 மணி நேரம் என்றால் பணம் படைத்தவர்கள் உடனே சிறப்பு தரிசனத்தில் செல்ல விழைகிறார்கள். பார்க்கப்போனால் பொது தரிசனத்தை விட அங்கு சிறப்பு தரிசனத்தில்தான் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
3 மணி நேர தரிசனத்தில் நாம் உள்ளே சென்றதும் பல அடுக்கு கொண்ட சிறைக் கூடம் ஒன்றில் நம்மை அடைக்கின்றனர். ஒவ்வொரு கூண்டாக திறந்து விட்டு தரிசனத்திற்கு அனுப்புவார்களாம். அதுவும் எவ்வளவு நேரம், மிஞ்சி போனால் 15 நிமிடத்தில் நமது கூண்டு திறக்கப்பட்டு வெளியே போகும்போது நம்முன் வரிசையில் யாருமே இல்லை.
அடடா இது என்ன விந்தை என்று வியந்தபடி நடந்து நடந்து நடந்து அந்த பொற்கோபுரத்தை பார்த்ததும். பரவாயில்லை, நன்றாக உள்ளது என்று நாம் வியந்தது என்னவோ உண்மைதான். அப்புறம் கடைசியாக வெகு தூரத்தில் இருந்த விக்ரகம்தான் அந்த கோயிலின் மூல தெய்வம். அதையும் பொது தரிசனம் என்பதால் வெகு தொலைவில் இருந்துதான் நாம் காண முடிந்தது. நம்மிடம்தான் பல நூறுகள் இல்லையே இருந்திருந்தால் கொஞ்சம் கிட்ட நின்று பார்த்துவிட்டு குங்குமம், லக்ஷ்மி படம் எல்லாம் பெற்று வந்திருக்கலாம்.
அதற்கு அடுத்தபடியாக அந்த அம்மா (?!)வின் பெரிய உருவப்படம் வைத்து அங்கு ஒரு பாதம் வைத்து வழிபாடு நடந்தது. அந்த பாதம் யாருடையது(?)
இதில் முக்கியமான விஷயம், நாங்கள் சிறப்பு தரிசனத்திற்கு கொடுக்காத காசை, அந்த சிறைக்கூண்டில் எங்களிடம் இருந்து பிடுங்கிவிடுகின்றன கடைகள். 3 மணி நேரம் ஆகுமே என்ற பயத்தில் அங்கு விற்கும் சூப், பால், டி, காபி, பாப்கான் போன்றவற்றை வாங்கி வயிற்றை நிரப்புகின்றனர் பலர்.
அதுவும் அதிக விலையில் அனைத்தும் விற்பனையாகிறது அமோகமாக.
இதில் இன்னோரு முக்கியத்துவம் என்றால், அங்கு நமது செல்போன், கேமரா போன்று எதையும் எடுத்துச் செல்ல இயலாது. உங்களிடம் தீப்பெட்டிக் கூட இருக்கக் கூடாதாம். ஒவ்வொரு பையும் ஸ்கேனிங் செய்து தரப்படும்.
இவ்வளவு கூத்தும் எதற்காக என்று நிச்சயமாக புரியவில்லை.
இறை தன்மை அற்ற அவ்விடத்தை கோயில் என்றும், அங்கு வீற்றிருப்பவர் தன்னைத்தானே தெய்வம் என்றும், அம்மா என்றும் அழைத்துக் கொள்வது கேலிக்குரியதாக உள்ளது.
ஒரு சிறிய பிள்ளையார் கோயிலில் கிடைக்கும் மன அமைதி, சாந்தி என எதுவும் எள்ளளவும் இல்லாத அவ்விடத்தை இனி யாரும் பொற்கோயில் என்று அழைக்காதீர்கள். அது ஒரு பொற்காட்சி. எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு அழகான இடம். அவ்வளவே.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்