தமிழ் எத்தனையோ குறும்புகளை தினம் தினம் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அதில் எல்லாம் இது ஹைலைட். வீட்டில் வீடியோ கேமரா இருந்திருந்தால் அதனை பதிவு செய்து நிச்சயம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம்.
ரொம்ப ஓவர் பில்டப் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு இது கொஞ்சம் அதிகம்தான். சரி விடுங்கள்.
ஒரு நாள் மாலையில் அவளுக்கு அலங்காரம் பண்ண அமர்ந்தேன். அவள் கையில் பவுடர் டப்பாவை வைத்துக் கொண்டிருந்தாள். நான் அவளுக்கு தலை வாரிக் கொண்டிருந்தேன்.
பவுடர் டப்பா அதிகமாக திறந்திருந்ததால் பவுடர் கொட்டும் டப்பா முழுவதும் பவுடரை நிரப்பி வைத்திருந்தாள். அதனை பார்த்ததும் ஏன் இப்படி செய்தாய் என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு அதனை வாங்கி கீழே வைத்தேன். உடனே அவள் அதனை எடுத்துக் கொண்டிருக்கிறாள். நான் கவனிக்கவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்தார். அவர் வாசலில் வந்து நின்று தமிழைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றுவிட்டார். அதன்பிறகுதான் நான் தமிழின் முகத்தைப் பார்த்தேன். அவள் பவுடர் அடிக்கும் ப·ப்பை பவுடரில் தொட்டு இரண்டு கண்களிலும் அடித்துள்ளாள். அதிகமான பவுடரின் காரணமாக இரண்டு கண்களும் இரண்டு வெள்ளை வட்டங்களாகவும், சிதறிய பவுடர்கள் அவள் முகம் முழுவதும் பரவி இருந்தது.
அதை பார்த்ததும் சிரித்துக் கொண்டே அதை அவளும் ரசிக்க எண்ணி ஓடிச் சென்று கண்ணாடியை எடுத்து அவளுக்குக் காட்டினேன்.
அவ்வளவுதான், அடுத்த நிமிஷம் தமிழ் அலறியடித்துக் கொண்டு என் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
அவளே அவளைப் பார்த்து பயந்துவிட்டாளாம்.
வீட்டிற்கு வந்திருந்தவர் ஏம்மா இப்படி செய்தாய், எனக்கே பயமாக இருந்ததே என்று கூறினார். நான் என்ன கண்டேன், அவளும் பயந்து போவாள் என்று கூறி நான் சிரித்தேன், குழந்தையை அணைத்தபடி.
பிறகு அவளுடைய முகத்தை நன்கு துடைத்துவிட்டு மீண்டும் கண்ணாடியை காண்பித்த பிறகுதான் அவள் சமாதானம் அடைந்தாள். பிறகு அவளே ஒருவாரு அதைப் பற்றி தெரிந்து கொண்டு அவள் அப்பா வந்ததும் கூறியதைக் கேட்டு மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டிருந்தேன்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்