ஆனால் இப்போதெல்லாம் தமிழைப் பற்றி கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்தால்... எதை எழுதுவது எதை விடுவது என்று குழம்பிவிடுகிறேன்.
அந்த அளவிற்கு அவளது சுட்டித்தனம் என்னை ஆக்ரமித்துள்ளது.
அவள் இரவு நேரங்களில் செய்யும் குறும்புகளை இங்கே முதலில் கூறிவிடுகிறேன்.
இரவு தூங்கச் செல்வது என்பதே அவளுக்குப் பிடிக்காது. விளையாட வேண்டும் என்ற ஒரு எண்ணத்துடனே சதி திட்டம் தீட்டுவாள்.
அவளை படுக்க வைத்து கதை சொல்ல ஆரம்பித்த சிறிது நேரத்தில் அம்மா தண்ணி அம்மா என்று கூறுவாள். சரி என்று தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பேன். குடித்துவிட்டு மீண்டும் கதை ஆரம்பிக்கும்.
கொஞ்ச நேரம்தான்... அம்மா பூஸ்ட் வேணும்மா என்று கூறுவாள். இப்போது அவளது அப்பா போய் பூஸ்ட் போட்டு கொண்டு வருவார்.
அதைக் குடித்துவிட்டு அவள் கட்டிலில் இருக்கவே மாட்டாள். ஜன்னலில் தொங்கிக் கொண்டிருப்பாள். அவளை பிடித்து கட்டிலில் போட்டால் அம்மா யானையில் (தொட்டிலில்) படுத்துக் கொள்கிறேன் என்பாள்.
சரி பிரச்சினை ஒரு வழியாக ஓய்ந்தது என்று தொட்டிலில் போட்டு ஆட்டுவேன். பாடிக் கொண்டேதான். அதற்கு அவளும் எசப்பாட்டு பாடுவாள்.. நான் சின்னஞ்சிறு கிளியே என்றால் அவள் கண்ணம்மா என்பாள். நான் ஓடி விளையாடு என்றால் அவள் பாப்பா என்று முடிப்பாள். இப்படியே என் கை ஓயும் சமயத்தில் அம்மா எழுந்துக்க போறேன்னு சொல்லுவாள்.
ஆள விடு சாமி இனிமே நம்மால தொட்டில ஆட்ட முடியாதுன்னு நினைச்சு இவளை இறக்கி மீண்டும் கட்டிலுக்கு வருவோம்.
கட்டிலில் படுக்காமல் பல்டி அடிக்க முயற்சி செய்வாள். அப்புறும் கதை பாட்டுப் பாடி படுக்க வைத்தால் அப்பா மூத்தா வருது என்பாள். அதையும் முடித்த பின் பாட்டு பாட ஆரம்டபித்தால் பாட்டு வேண்டாம், கதை சொல்லுன்னு சொல்வாள். கதை ஆரம்பிக்கும்போது பாடு என்பாள். இப்படியே நம்மள வச்சு ஒவ்வொரு காமெடியாக முடித்துவிட்டு நாம் தூங்கியே விடுவோம். அப்புறம் மெதுவாக அவள் அப்பாவை எழுப்பி காமெடி செய்ய ஆரம்பிப்பாள். இப்படியே இரவு 12 அல்லது 1 மணி ஆன பிறகுதான் எங்கள் தமிழ் சுனாமி ஓயும்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்