வீட்டுக்காரர் என்றதும் கட்டிய கணவன் என்று நினைத்து விடாதீர்கள். வாடகைக்கு வீடு கொடுக்கும் வீட்டு உரிமையாளர்களின் அட்டூழியங்கள் ஏராளம் ஏராளம். சொல்லி மாளாதவை, கொட்டித் தீராதவை.
அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வெகு நாளாக இருந்தது. அது இன்றி தான் நிறைவேறியது. என் நண்பர்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் கூட தங்களது வீட்டு உரிமையாளர்கள் அளிக்கும் தொல்லைகளைக் கூறி ரத்த கண்ணீர் விடுவதை கேட்டுள்ளேன்.
அவற்றைத்தான் இங்கு கட்டுரையாக்கியுள்ளேன்.
முன்பெல்லாம் வீடு காலியாக இருந்தால் டூலெட் போடு போட்டுவிடுவார்கள். நாம் நேரடியாக உரிமையாளரை அணுகி வீட்டைப் பார்த்து பிடித்தால் அட்வான்ஸ் கொடுப்போம்.
ஆனால் இப்போதெல்லாம் டூலெட் போடுகளைப் பார்க்கவே முடிவதில்லை. 1500 ரூபாய் வீட்டை 2,500க்கு வாடகைக்கு விட ஏற்பாடு செய்வதாக ஆசை வார்த்தை கூறுவதால் அவர்கள் கொண்டு வரும் நபர்களுக்குத்தான் வீடு.
ஒரு மாத வாடகைப் பணத்தை தரகுப் பணமாக வாடகைக்கு வருபவர்கள் தர வேண்டும். வாடகையை உயர்த்துவதால் உரிமையாளருக்கும் லாபம், தரகருக்கும் லாபம். வாடகைக்கு வீடு பார்ப்பவரின் நிலையோ பரிதாபம்...
வீடு காலியாக இருப்பது தெரிந்து நேரடியாக வீட்டு உரிமையாளரிடம் போய் நாம் விசாரித்தால், அவர் சொல்லும் பதில் வியப்பாக உள்ளது. நான் ஒரு தரகரிடம் சொல்லியிருக்கிறேன். அவரிடம் நீங்கள் சென்று பேசுங்கள். அவர் மூலமாக வந்து வீட்டை பாருங்கள் என்கிறார்.
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பதெல்லாம் விட்டுட்டு வீட்டை மாற்றிப் பார், பசங்களை பள்ளியில் சேர்த்துப் பார் என்று புதுமொழி எழுத வைத்தவர்களே இந்த தரகர்கள்தான்.
சரி இவர்கள் இப்படியிருக்க, எந்த ஒரு வசதியும் இல்லாமல் நான்கு குட்டிச் சுவர்களை மூடிய ஒரு தார்பாய் இருந்தாலே அது ஒரு வீடு என்றும், அதற்கு 2,000ம் வாடகை என்றும், 20,000 அட்வான்ஸ், தண்ணிக்கு 200, வாசல் விளக்குக்கு 50, குடிநீருக்கு 50, வாசலில் கோலம் போட 50 என என்னென்ன வழிகளில் எல்லாம் காசை பிடுங்க முடியுமோ அப்படி எல்லாம் பிடுங்கித் திண்ணுகிறார்கள்.
சரி சரி யாரும் கோபப்படாதீர்கள். மின்சாரத்தை விட்டுவிட்டேனே என்று.. அது தனிக் கதை அதனை ஒரு தனி கட்டுரை போடலாம் என்று இருக்கிறேன். அதனால் மின்சாரக் கட்டணத்தையும் சேர்த்து தனியாக ஒரு 1000 ரூபாயை அவர்களுக்கு மொய் எழுத வேண்டும்.
இவர்கள் இன்னும் போடாதது, சாலை வரி, கட்டட வரி, காம்பவுண்ட் வரி, காற்று வரி, வீட்டில் இருக்கும் மூட்டைப்பூச்சுகளுக்கு வரிகள்தான்... அச்சச்சோ... வீட்டு உரிமையாளர்களுக்கு தேவையில்லாம ஐடியா கொடுத்துட்டேனோ????
இதன் தொடர்ச்சி வரும் கட்டுரையில்... நீங்களும் உங்கள் புலம்பல்களை இதில் சேர்க்கலாம். நீங்கள் அளிக்கும் கருத்துரைகள் அடுத்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்