Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

தனிமையின் தாக்கம்



இதுவரை மகிழ்ச்சியான கதைகளைப் பேசிய எனது வலைதளத்தில் முதல் முறையாக (என்று நினைக்கிறேன்) ஒரு சிறிய மனக்கவலையை தெரிவிக்கிறேன்.

தனிமை... தற்போது இதுதான் பெரும்பாலான பிரச்சினையாக இருப்பதாக நான் பொதுவாக உணர்கிறேன்.

தனிமை என்பது யாரும் இல்லாமல், பேச்சுத் துணையும் இன்றி, உதவிக்கு ஆள் இன்றி இருப்பது. இந்த தனிமை எப்போதெல்லாம் நேரிடுகிறது.

இளமை‌யி‌ல்...

கல்வி, பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு ஒரு இடத்தில் இருக்கும்போது சிறிது காலம் நாம் அப்படித்தான் உணர்வோம். அது என்ன சிறிது காலம் என்றால், சில நாட்களில் அங்கு நமக்கு நண்பர்கள் வட்டாரம் உருவாகி அந்த தனிமையை விரட்டிவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் கூறுவது.

த‌ம்ப‌திகளு‌க்கு...

இரண்டாவது, திருமணமான தம்பதிகளில் இருவரும் வேறு வேறு இடங்களில் பணியாற்றும்போது இருவருக்குள்ளும் அவ்வப்போது இந்த தனிமை வந்து வாட்டத் துவங்கிவிடும். இதற்கும் தீர்வு உண்டு அவர்களது பணி மாறுதல் மூலமாக.

குழ‌ந்தைகளு‌க்கு...

சில குழந்தைகள், பெற்றோரை இழந்து அல்லது தாயை இழந்து தாத்தா, பாட்டியின் வீடுகளில் வசிக்கும்போதும் இந்த தனிமை அவர்களை பற்றிக் கொள்கிறது. என்னதான் தாத்தா, பாட்டியாக இருந்தாலும் அவர்களைப் பொருத்தவரை அங்கு அவர்கள் ஒரு விருந்தாளிதான். தன்னுடைய வீட்டில் கிடைக்கும் சுதந்திரம் வராது. இந்த நிலையை மாற்ற பெரும்பாலும் வழியே இல்லாமல் போய்விடுகிறது.

குடு‌ம்ப‌த் தலைவ‌ன்...

ஒரு இனிதான குடும்பத்தின் தலைவி இறக்கும்போது, அந்த குடும்பம் சின்னாபின்னமாகிறது. குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளை தந்தையால் பராமரிக்க முடியாமல் உறவினர் வீடுகளில் விட்டுவிடுவதும், தந்தை ஏதோ ஒரு வீட்டில் அனாதையாக வாழ்வதும் (எனது குடு‌ம்ப ந‌ண்ப‌ர் ஒருவரது சோக‌க் கதை) நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் குடும்பத் தலைவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அந்த தனிமையை விரட்டுவதும் உண்டு.

வயோ‌திக‌த்‌‌தி‌ல்..

ஆனால், வயோதியத்தில் பேச்சுத் துணையாய், ஊன்றுகோலாய், உட‌ல் உறு‌ப்புக‌ள் மழு‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது அதனை ஈடுகொடு‌க்க கண்ணாக, காதாக, கையாக இருக்கும் வாழ்க்கைத் துணையை இழக்கும்போது அவர்களது தனிமையை என்னவென்று சொல்வது.

அதுவும், ஆண்களாய் இருக்கும் அந்த வயோதிகர்களுக்கு வாழ்க்கையே பெரும் சவாலாய் போய்விடுகிறது. தனக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்த மனைவியை இழந்து தனிமையில் வாடும் தகப்பனை எந்த மகனாலும், மகளாலும் சரியாக பராமரிக்க முடியாமல் போய்விடும் நிலையில், அவர்களது பேச்சுகளைக் கேட்கும் பொறுமை இழந்த பேரன் பேத்திகளுக்கு மத்தியில், ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு யுகங்களாகக் கழிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரு விதிவிலக்காக மற்றொரு பிரச்சினை உண்டு. அதாவது, நமக்கென்று யாரும் இல்லாத தனிமையை விடவும் கொடிதான ஒன்று அது.

அதாவது, நம்மருகே நமக்கானவர்கள் இருந்தும், நமது குறைகளையும், ஆசைகளையும், குற்றங்களையும், மகிழ்ச்சியையும், விருப்பத்தையும் அவர்களிடம் சொல்ல முடியாத (அவர் கேட்பதற்கு தயாராக இல்லாமல் அல்லது சொல்லக்கூடிய நம்பகத்தன்மை அற்றவராக) இருந்தால் அதுவும் கொடிதுதான்.

ஏதோ சொல்லவந்து எதையோ சொல்லிவிட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... தனிமையைப் பற்றி..

மறுமொழிகள்

Re: தனிமையின் தாக்கம்
அவசர உலகில் தனிமை அதிகரித்துள்ளது.தனிமை துக்கத்தை வரவழைக்கும்.இதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும் வயோதிபர்களும். நித்யா
Re: தனிமையின் தாக்கம்
தனிமை நரகமாக இருப்பதற்குக் காரணம் நாம் எப்பொழுதும் எதற்கும் அடுத்தவர்களைச் சார்ந்திருப்பதே. அநுபவிக்கத் தெரிந்துகொண்டு விட்டால், உண்மையிலேயே தனிமை ஒரு சொர்க்கம். நாம் நாமாகவே இருக்கலாம். நிறைய சிந்திக்கலாம். கனவு காணலாம். அல்லது சும்மா பேசாமலே இருக்கலாம். இனிது இனிது ஏகாந்தம் இனிது என்பது சத்தியமான உண்மை.
Re: தனிமையின் தாக்கம்
த‌னிமை=தனி+மை. அதாவது ஒரு வெள்ளை காகிதத்தில் தனியாக ஒரு மை இருந்தால் நாம் அந்த மையை தா‌ன் பார்ப்போம். அதுபோல ஒருவர் தனிமையில் இருந்தால் அனைவரும் அந்த நபரை தா‌ன் பார்ப்பார்கள். எனவே நீங்கள் தனிமையை உணர்ந்தால் அனைவரும் உங்களை பார்க்கிறார்கள் எ‌ன்று அர்த்தம்....-Vigneshwaranthala
Re: தனிமையின் தாக்கம்
your experience is my experience. very good story.thank you.
Re: தனிமையின் தாக்கம்
உ‌ங்களது த‌னிமையு‌ம் இ‌னிமையாகு‌ம். கவலை வே‌ண்டா‌ம்.
கைதுறப்பு