நமது வாழ்க்கையில் எத்தனையோ ஆசிரியர்களை சந்திக்கிறோம். ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். ஒரு சிலர் அவர்களது தனித்திறமையாலும், ஒரு சிலர் அவர்களது தனித்துவத்தாலும், ஒரு சிலர் அவர்களது அடாவடிகளாலும் நம் மனதில் கல்வெட்டாக நிலைத்துவிடுகின்றனர்.
அதுபோன்று என் மனதை பாதித்த ஒரு சில ஆசிரியர்களை பற்றியதுதான் இந்த கட்டுரை. சுருக்கமாகவே முடித்துவிடுகிறேன்.
எனது துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலம்மாள். மிகவும் கண்டிப்பான, திறமையான ஆசிரியர். நான் படித்துமுடித்து பல ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவம் இது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்துக் கொண்டு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார்கள். அப்போது உடல் நலம் குன்றிய ஒரு குழந்தையை, குழந்தையின் தாயார் சுற்றுலாவிற்கு அனுப்பியுள்ளார். வழியில் அந்த குழந்தை இறந்துவிட, அதனால் அதிர்ச்சி அடைந்த எனது தலைமை ஆசிரியர் மாரடைப்பால் ஒரு சில நாட்களில் மரணமடைந்தார்.
இதனால் நான் பெரிதும் மனக்கவலை அடைந்தேன். அந்த தாய் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் எனது தலைமை ஆசிரியர்தான் குழந்தையை கொன்றார் என்பது போல் சூழ்நிலையை மாற்றியதே இதற்குக் காரணம். நாங்கள் இழந்தது ஒரு ஆசிரியர் என்றால், அந்த ஆசிரியரின் குடும்பத்தை நினைக்கையில் கனக்கிறது மனது.
நான் ஹிந்தி படித்த மைதிலி ஜி என்னை மிகவும் கவர்ந்தவர். அவரது கணவர் அரசு பள்ளி ஒன்றின் ஆசிரியர். அவர் தனியார் பள்ளி ஒன்றையும் நிர்வகித்து வந்தார். வீட்டுக்குள்ளேயே பிள்ளைகளுக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்து வந்த மைதிலி ஜியின் பிள்ளை கண்பார்வை அற்றவர். தற்போது பட்டப்படிப்பு படித்துள்ளார்.
ஒரு நாள் திடீரென மாரடைப்பால் கணவர் இறக்க அனைத்து சுமைகளும் எனது ஆசிரியர் மீது விழுகிறது. அப்போது அவரைத் தாங்கிப் பிடிக்க ஒரு தோளும் இல்லை. உறவுகளும் ஒதுங்கிக் கொள்ள, தன்னந்தனியாக பள்ளியையும், ஹிந்தி வகுப்பையும் நடத்தி வருகிறார். தற்போது அந்த பள்ளியின் மற்றொரு கிளையையும் சொந்த கட்டடத்திலேயே துவக்கியுள்ளார்.
அவரது பாசத்திற்கும், திறமைக்கும் அங்கு படிக்கும் எல்லா குழந்தைகளும் அடிமை நான் உட்பட. அவருடன் கழித்த பல நாட்களை என் மனது அடிக்கடி நினைவு கூரும். பெண்களுக்கு எல்லாம் இவர் ஒரு வழிகாட்டி என்று என மனம் பெருமைப்படும்.
என்றும் ஏதாவது ஒரு விஷயத்தில் நாம் பாடம் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப் பார்த்தால் நாம் சாகும்வரை மாணவர்கள்தான். நல்ல சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களோடு நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்