சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட எனது குழந்தைக்கு எங்கு மருத்துவம் அளிப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன்.தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு வைரல் இன்·பெக்ஷன் ஆகிவிட்டதாக ரத்த பரிசோதனையில் தெரிய வந்தது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் 7 நாட்கள் அட்மிட் செய்து, தொடர்ந்து டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி அனுப்பினர்.
குழந்தையின் உடல்நிலையில் கொண்ட கவலையும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற நிலையும் என்னை மிகவும் வாட்டியது.
அப்போது என் கணவரும், நெருங்கிய நண்பர்களும் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுரை வழங்கினர்.
ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள என் மனம் கொஞ்சம் அடம்பிடித்தது. என்ன நம்ம குழந்தைய அரசு மருத்துவமனைக்கா? தனியார் மருத்துவமனையில் சேர்த்து பார்க்க முடியாதா என்ன? என்றெல்லாம் கேள்விகள் என் மனதில் எழுந்தன.
இருந்தாலும் மற்றவர்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு முறை போய் பார்த்துவிட்டு வந்து விடலாமே என்ற எண்ணத்தில் அதிகாலையில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குப் புறப்பட்டோம்.
மனதிற்குள் பல்வேறு போராட்டங்களுடன் மருத்துவமனையை நெருங்கினேன். அங்கு காலை 6 மணிக்கெல்லாம் சுமார் 200, 250 பேர் வரை வரிசையில் காத்திருந்தனர். அதனைப் பார்த்ததும் எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் சுக்குநூறானது.
கனத்த இதயத்துடன் வரிசையில் நின்றேன். மருத்துவமனையின் வெளியே சுகாதாரம் இல்லை. இங்கேயே இப்படி இருக்கிறதே. உள்ளே எப்படி இருக்கும் என்று மனதிற்குள் குழம்பினேன்.
கொஞ்ச நேரத்தில் மருத்துவரை சந்தித்து, அவர்களது சிகிச்சை முறையைப் பார்த்ததும் அசந்தேப் போனேன். உடனடியாக எக்ஸ்ரே எடுத்து குழந்தையை அட்மிட் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.
அதுவும் சரிதான் என்று எனக்குப் பட்டது. ஏனென்றால் குழந்தையின் நிலை மோசமாக இருந்தது.
அந்த நேரத்தில் தெய்வம் போல சீ·ப் டாக்டர் ராஜேந்திரன் வந்து குழந்தையின் நிலையை பரிசோதித்தார். அவர் எதற்காக பிளட் டெஸ்ட் எடுத்தீர்கள் என்று கோபித்துக் கொண்டார். இங்கே எல்லா வசதிகளும் உள்ளது. எதற்காக வெளியே பணம் செலவு செய்து இதையெல்லாம் செய்கின்றீர்கள்.
குழந்தைக்கு ஒன்றும் இல்லை. வீட்டிலேயே வைத்துப் பார்த்துக் கொள். மருந்துகளை மட்டும் தவறாமல் கொடுத்துவிடு என்று நம்பிக்கை அளித்தார்.
மீண்டும் எப்போது வர வேண்டும் என்று கேட்டதற்கு, தேவையே இருக்காது. இந்த மருந்தைக் கொடுத்தால் நிச்சயம் சரியாகிவிடும் என்று கூறி அனுப்பினார்.
நம்பிக்கையுடனும், மனதில் சந்தோஷத்துடனும் வீடு திரும்பி குழந்தைக்கு மருந்து கொடுத்தேன்.
காலை, மதியம் என இரண்டு முறை மருந்து உட்கொண்டதிலேயே நல்ல மாற்றம் தெரிந்தது. மாலையில் அவள் எழுந்து விளையாடத் துவங்கினாள். நின்று போயிருந்த எங்கள் இதயம் சந்தோஷத்தில் குதிக்கத் துவங்கியது.
பிறகு இரண்டு நாள் மருந்துகளையும் அளித்ததும் கடுமையான ஜுரம் காணாமல் போனது. சளியும் லேசாக அகல ஆரம்பித்தது.
கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, மறுநாள் அதே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று மீண்டும் அவளது உடல்நிலையை பரிசோதித்து உறுதி செய்து கொண்டோம்.
அந்த மருத்துவமனைக்கு எங்கிருந்தெல்லாமோ மக்கள் வருகின்றனர். அங்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் காத்திருக்கின்றனர். கூட்டமும், நமது நோயும் வேண்டுமானால் நம்மை அவதிக்குள்ளாக்கலாம். ஆனால் சிறப்பான சிகிச்சை நிச்சயம் கிடைக்கும் என்பது உண்மை.
அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மிகவும் சிறப்பானதாக உள்ளன. குழந்தைகளுக்கென்றே பிரத்யேக கவனம் எடுத்துக் கொள்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே அரசு மருத்துவமனைகள் ஒன்றும் மட்டமல்ல. தனியார் மருத்துவமனைகளில் வாங்கி வைத்திருக்கும் மருத்துவ இயந்திரங்களை தூசு தட்டுவதற்காகவே நமக்கு பல வைத்தியங்களை செய்து அனுப்பும் நிலை அங்கு இல்லை. நோய்க்கு ஏற்ற மருந்து மட்டுமே... உடலுக்கும், நமது பணப்பைக்கும் உத்திரவாதம் நிச்சயம்.
அப்பொழுதுதான் தோன்றியது பார்ப்பதற்கு பலாப்பழம் போல் இருந்தாலும் சுளைகள் சுவையாகத்தான் உள்ளன என்று

நினைவேறுகிறது…
மறுமொழிகள்