பிரச்சினை வந்த பிறகு அதனை போக்குவது கொஞ்சம் சிரமம்தான். அதனால் கோடையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையையும் பழக்க வழக்கங்களையும் சரியாக அமைத்துக் கொண்டால் ஓரளவிற்கு சமாளித்துவிடலாம்.
அதற்காக ஒரு சில குறிப்புகள் இங்கே...
தண்ணீர் அதிகமாக பருக வேண்டும்
இதைச் சொல்ல வேண்டியதே இல்லை. சாதாரணமாகவே தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த வெயிலில் இருந்து உடலின் சீர் தன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அடிக்கடி தண்ணீரை பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.
தண்ணீர் என்றால் மிகக் குளிர்ச்சியான தண்ணீர் அல்ல... சுத்தமான, சுடவைத்து நன்கு ஆற வைத்த தண்ணீரே உடலுக்கு ஏற்றது. குளிர்ச்சியான தண்ணீரை வெயிலில் தவிர்ப்பதே சிறந்தது.
தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவையும் உடலில் தண்ணீர் தன்மையத் தக்க வைக்க உதவும்.
உடனடி மாற்றம் வேண்டாம்
கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று நேராக குளிர்சாதன வசதி கொண்ட அறைக்குள் நுழைய வேண்டாம். சமநிலை வெப்பநிலை நிலவும் ஓரிடத்தில் சற்று நேரம் நின்றுவிட்டு பின்னர் அறைக்குள் நுழைவது சிறந்தது.
அதேப்போலத்தான் வெளியில் சென்றுவிட்டு வந்ததும் குளிர்ச்சியான நீரை அதிக அளவில் பருக வேண்டாம்.
மதியம் வேளையில் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் போட்டு முகத்தை கழுவுவதும் தவறு. நன்கு வியர்த்துக் கொண்டிருக்கும் போது அதனை உடனடியாக நிறுத்துவதால்தான் வேர்க்குருக்கள் தோலில் தோன்றுகின்றன.
லேசான பருத்தி ஆடைகள்
உடலை இறுக்கும் ஆடைகளை தவிர்த்துவிட்டு மிக லேசான, தளர்வான ஆடைகளைப் பயன்படுத்துங்கள். பருத்தி ஆடைகள் கோடைக்கு மிகவும் ஏற்றது.
வெயிலை கிரகித்துக் கொள்ளும் கருப்பு போன்ற நிறங்களினால் ஆன ஆடைகளையும் கோடை வரை தவிர்க்கவும்.
குடையைப் பிடியுங்கள்
காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை எங்கு சென்று வருவதாக இருந்தாலும் கையில் குடையை கொண்டு செல்லுங்கள். நேரடியாக சூரிய ஒளி படும் படி வெகு நேரம் எங்கும் இருக்காதீர்கள்.
வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள், சைக்கிளில் சென்றாலும் தொப்பியாவது அணிந்து செல்லுங்கள்.
அதிக நேரம் வெயிலில் இருந்தால் நமது உடல் தண்ணீர் தன்மையை இழக்கிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் உணவில் காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்களை விட புதிய பழங்கள் உண்பது கோடைக்கு நல்லது.
கோக், மிரண்டா போன்று குளிர் பானங்களைத் தவிர்த்து பழச்சாறு அருந்துங்கள்.
தினமும் வீட்டிலேயே எலுமிச்சை சாறு செய்து அருந்துவது கோடையை சமாளிப்பதற்கான சக்தியை உடலுக்குத் தரும்.
தவிர்க்க வேண்டியவை
சூடான, மிகுந்த குளிர்ச்சியான, காரம் நிறைந்த, வறுத்த, பொறித்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. இவை அனைத்துமே வெயிலால் உடலில் ஏற்படும் தீங்கினை இரண்டு மடங்காக்கிவிடும்.
அதிக நேரம் வெயிலில் அலைவரை தவிர்க்கவும். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும்.
அதாவது பூண்டு, அண்ணாசிபழம், பப்பாளி, பீட்ரூட், மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளவும். மாம்பழமும் உஷ்ணத்தைக் கொடுக்கும். ஆனால் இதுதான் மாம்பழக் காலம். இப்போது சாப்பிடவில்லை என்றால் பின் எப்போது சாப்பிடுவது. எனவே ஒரு நாள் இரவு முழுவதும் மாம்பழத்தை தண்ணீரில் முக்கி வைத்திருந்து மறுநாள் எடுத்து சாப்பிட்டால் உஷ்ணம் கட்டுப்படும்.
தண்ணீருடன் செல்லுங்கள்
எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டீலை உடன் வைத்திருங்கள். கோடையில் தண்ணீர் தாகத்திற்கு பஞ்சமே இருக்காது. கண்ட கண்ட இடங்களிலும் கடையிலும் இருக்கும் நீரை வாங்கிப் பருகி அதனால் பல்வேறு நோய்த் தாக்குதல்களை ஏன் பெற வேண்டும். சுத்தமான குடிநீரை உங்களுடன் வைத்திருந்து தேவைப்படும் போதெல்லாம் குடித்துக் கொள்வது நலம்தானே.

நினைவேறுகிறது…