ஓடி ஆடிக் கொண்டிருந்த குழந்தைகளை தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்ற பெற்றோர்கள்... தடுப்பூசி போட்டால் குழந்தைக்கு ஜூரம் வருமே என்று பயந்த தாய்மார்கள், ஊசி குத்தினால் வலிக்குமே என்று அஞ்சிய குழந்தைகள் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்திருப்பார்களா இதனை....
ஒரு நோயும் தாக்கக் கூடாது என்பதற்காக தடுப்பூசிப் போட வந்தால்... உயிரேப் போய்விட்டதே.. ஆம் இறந்த பிறகு எந்த நோயும் வராது என்பதால்தான் தடுப்பூசி போடுங்கள் எந்த நோயும் வராது என்று உறுதியாக சொன்னார்களோ. இது தெரியாமல் போனதே பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு.
ஏதோ விதி வந்தது... முடிந்துவிட்டது என்று புறம்தள்ளி விட முடியாது இந்த சம்பவத்தை...
பிள்ளைகள் பறிபோன செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும்போது எனது ஆவல் ஒன்றாகத்தான் இருந்தது... இது வன்முறைதான் என்றாலும் பெற்ற மனதிற்குத்தான் தெரியும்.. அதன் வலி... என்ன தெரியுமா... செய்தியின் கடைசியில்.. அங்கிருந்த மருத்துவமனை, ஊசி போட்டவர்கள் அடித்து உதைக்கப்பட்டனர் என்ற விவரம் சேர்க்கப்பட்டிருக்காதா என்பதுதான் அந்த ஆவல். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் என்று அப்புறம்தான் மனது கூறியது.
சரி... உடனடியாக அவர்களை பணி நீக்கம் செய்து பாதுகாத்துள்ளது தமிழக அரசு... உடனடி துரித விசாரணை நடத்தி அவர்களை தண்டிக்கும் நடவடிக்கையை எடுக்காமல், குழந்தையை இழந்த குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியாம்.. அந்த 3 லட்ச ரூபாய் அங்கும் இங்கும் ஓடியாடுமா?... அம்மா... அப்பா.. என்று கொஞ்சி மகிழுமா? குழந்தைகளின் உயிருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதை விட... முக்கியமான காரியம்.. உயிரைப் பறிப்பதற்குக் காரணமானவர்களை தண்டிப்பதுதான் என்பது எனது வாதம்.
இந்தியன் இம்யூனோலாஜிகல் லிமிடட் என்ற நிறுவனம் தயாரித்த தட்டம்மை தடுப்பூசி மருந்துகள்தான் உயிரிழந்த குழந்தைகளுக்குப் போடப்பட்ட தடுப்பூசி மருந்தாகும்.
தவறு எங்கு நடந்தது என்று கண்டறிந்து உடனடி தீர்வை அளிக்கத் தவறினால் இரு அரசுகளும் தங்களது பதவியை இழக்க நேரிடும் என்பது ஐயமில்லை.
இது ஒரு சாதாரண விடயமும் இல்லை... குழந்தைகளின் உயிர் ஒரு மலிவான பொருளும் இல்லை....
இனி சுகாதார மையத்திற்கு தங்களது குழந்தையைத் தூக்கிச் சென்று தடுப்பூசி போட எந்த பெற்றோராவது எண்ணுவார்களா?
நோயாவது.. நாயாவது... குழந்தை உயிருடன் இருந்தாலே போதும் என்று அல்லவா எண்ணுவார்கள். இந்த எண்ணத்தை எத்தனை லட்சம் கொடுத்தாலும் எந்த அரசாலும் மாற்ற முடியாது.
லட்சம் லட்சமாக செலவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று விளம்பரப்படுத்திய அதே அரசு.. ஒரு சில ரூபாய்களில் தடுப்பூசியே வேண்டாம் என்று இலவச விளம்பரம் செய்து விட்டதே மக்களிடம்... இது சரியா...
வகைகள்: கட்டுரை
2008
நினைவேறுகிறது…