கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து தமிழ் மொழியும், தமிழ் மக்களையும் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் நானும் எனது தோழி ஷீபாவும்தான் அவளுக்கு உதவினோம்.
உதவினோம் என்று சொன்னதும் நீங்கள் எங்களை ஆஹா ஓஹோ என்று புகழாதீர்கள். அவளை எங்களால் முடிந்த வரை குழப்பினோம். அதாவது மரியாதையாக யாரையாவது கூப்பிட வேண்டும் என்றால் எருமை மாடு என்று சொல் அ
வர்கள் நீங்கள் எது கேட்டாலும் செய்து தருவார்கள் என்பது போன்றவைகள்தான் அந்த உதவல்கள்.அவள் எங்களைப் பற்றி புரிந்து கொண்டு உண்மையிலேயே நல்ல தமிழ் மக்களிடம் சென்று அவர்களுடன் பேசி தமிழை மிக இனிமையாகக் கற்றுக் கொண்டாள். இவ்வளவு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொண்டது மிக ஆச்சரியம்.
தற்போது அவளது மழலைத் தமிழை சில நேரங்களில் நான்தான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன் தமிழில்.
எதற்கெடுத்தாலும் தனக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்வதும், சரியான இடத்தில் அதனை உபயோகிப்பதும் அவளது சாமர்த்தியம்.
சில நேரங்களில் அர்த்தம் மட்டும் சரியாக இருக்கும். ஆனால் அந்த இடத்தில் அந்த வார்த்தை சரிபடாமல் போய்விடும். அப்போதெல்லாம் எங்கள் அரங்கம் அதிரும் சிரிப்பொலிகளால்.
தமிழ் பேசுவது மட்டுமல்ல... சில விவகாரமான தமிழ் பாடல்களையும் பாடி அசத்துவாள். அதற்குரிய அர்த்தம் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
ஒரு சின்ன கற்பனை செய்து பார்த்ததில் என் மகளும், இவளும் பேசிக் கொண்டால் எப்படி இருக்கும். ஒரு வேளை இருவருக்கும் பேசிக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்காதோ என்று தோன்றுகிறது.
தமிழ் வேண்டுமானால் இவளுக்கு எளிதாக வந்து விடலாம். ஆனால் வாழைப்பழம் மட்டும் இவளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. ஆம் வாலப்பலம் மட்டுமே அவள் வாய் சுவைத்த கனி.
எங்கள் தோழிகள் குழுவின் தாதாவும் இந்த கன்னடத்து பைங்கிளிதான். தமிழ் பேசுவது எளிது, அதையும் எதுகை மோனையுடன் பேசுவாள்,,, மன்னிக்கவும் திட்டுவாள்.
அதாவது புடிச்சு அடிச்சா புரசைவாக்கம் போய் விழுவே என்று என்னை அடிக்கடி செல்லமாக திட்டுவாள் இந்த தாதா.
கர்நாடக அரசியல்வாதிகள் செய்யும் பல சில்மிஷங்களில் தற்போது ஒகேனக்கல் பிரச்சினையும் ஒன்று.
அதையெல்லாம் தாண்டி அண்டை மாநில மக்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு உள்ளது. அம்மாநில மக்கள் பலரும் இங்கே உள்ளனர். நம் மக்கள் பலரும் அங்கே வாழ்கின்றனர்.
இங்கு இருக்கும் கன்னட மக்களை நாம் சகோதரர் போல் பாவித்தால்தான் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பத்திரமாக இருக்க முடியும்.
அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு எம்மொழிக்காரர்களும் இரையாக வேண்டாம்.
வகைகள்: மற்றவை
2008
நினைவேறுகிறது…