இப்படி நம் நாட்டின் பெருமைகள்தான் ஏராளம் ஏராளம். இங்கு இருக்கும் வளங்களோ தாராளம் தாராளம்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஆம் மண் வளத்தாலும், மனிதர் வளத்தாலும், உடல் உழைப்பாலும், அறிவாற்றலாலும் உயர்ந்து ஓங்கியுள்ளது இந்தியா.
ஆங்கிலேயர் ஆட்சியில் கொத்தடிமைகளாக இருந்து, கூலிக்கு மாரடித்த இந்தியர்கள் அதில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றனர். அதற்காக தங்களது இன்னுயிரை இழந்தவர் பலர்.
சுதந்திரம் அடைந்ததுடன் நில்லாமல், நம்மை நாமே கட்டி ஆள நமக்கென ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொண்டதுதான் இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை நிர்ணயித்தது.
எத்தனை எத்தனை சட்டங்கள், ஒழுங்கு முறைகள். பல்வேறு கனவுகளுடன் இந்த சட்டங்கள் அன்றைய நாளில் நிறைவேற்றப்பட்டது. அந்த கனவுகள் நனவாகினவா என்பது ஒருபுறமிருக்கட்டும்.
ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்ல கிழக்கு வானில் சூரிய உதயத்தைக் கண்ட இந்தியாவின் தற்போதைய நிலமை...
நல்ல மண் வளம், மனித வளம், பாரம்பரியம், ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப முறை, ஆன்மீகம் இவைதான் இந்தியாவின் தூண்கள். உலக நாடுகளில் எங்கும் இல்லாத பல்வேறு சிறந்த பாரம்பரியங்களைக் கொண்ட இந்தியா இந்த தூண்களை இழந்துதான் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது என்பது சோகத்தின் உச்சகட்ட சந்தோஷம்.
மண் வளத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடிய விவசாயம் மறக்கப்பட்டது, ஆங்காங்கே தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. தற்போது இந்தியா கணினியிலும், தொழில்நுட்பத்திலும் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் பணிகளை வாங்கி மிகச் சிறப்பாக செய்து அளிக்கிறது என்ற நற்சான்றிதழுடன் இந்தியாவிற்குள் பல பிபிஓ நிறுவனங்கள் காலூன்றி நிற்கின்றன.
மனித வளம்.. எந்த வேலையைச் செய்தாலும் அதில் அழகும், அறிவும், அசுர வேகத்தையும் காட்டும் ஆற்றல் ஒவ்வொரு இந்தியனிடத்திலும் இருந்தது. அளவுக்கதிகமான மனித வளத்தைப் பெற்றுள்ள இந்தியாவில் தற்போது எத்தனை எத்தனை தானியங்கி இயந்திரப் பயன்பாடுகள்.
தானியங்கி பணப்பட்டுவாடா, தானியங்கி தொலைபேசி, தானியங்கி டிக்கெட் கவுண்டர்கள் என எல்லாம் தானே இயங்கினால் மனிதர்களுக்கு எங்கே வேலை.
இதெல்லாம் போகட்டும், கோயில்களில் விசேஷ காலங்களில் நாத வித்வான் இருந்த இடத்தில் தற்போதைய நாகரீக காலத்தின் இசைக் கருவி அல்லவா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் நாத வித்வான்கள் தான் சோக கீதம் வாசிக்கின்றனர்.
பாரம்பரியம்... இந்தியாவில்தான் எத்தனை எத்தனை பாரம்பரியங்கள். பல்வேறு சமுதாய, மத மக்களை ஒருங்கேப் பெற்ற இந்தியாவில் அண்டை நாடுகளுடன் சமாதான முயற்சி, பேருந்து, ரயில் சேவை, கிரிக்கெட் போட்டிகள் என்ற வளர்ந்த நிலையினால் தற்போது மதக் கலவரங்களும், தீவிரவாதமும் இந்தியாவிற்குள்புகுந்து கொண்டு சீரழித்துக் கொண்டு வருகிறது.
ஒருவனுக்கு ஒருத்தி, ஒரு குடும்பம் ஒரு பிள்ளை என்ற வாசகங்களை பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இந்தியா நாகரீகத்தில் அடிபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் காவல்துறையை நாடுவதாலும், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் என்றாகிவிட்ட சூழ்நிலையில் குடும்ப உறவுகள் சின்னாபின்மாகி வருகின்றன.
ஆனால் சாதாரண பொதுமக்களுக்கும் காவல்துறையும், நீதிமன்றமும் தற்போது எளிதாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. நுகர்வோர் நீதிமன்றங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
எங்கும் கோயில்களும், இறை உணர்வும் மிகுந்து இருக்கும் இந்தியா தற்போதும் ஆன்மீக மணம் கமழும் நாடாகவே விளங்கி வருகிறது.
ஆனால் ஆங்காங்கே ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டு சாமியார்கள் அடிக்கும் கூத்துகள் இறையாண்மைக்கே உலை வைத்துவிடும் போல் அல்லவா இருக்கிறது?
நமது தூண்களை இடித்துவிட்டு அங்கே பூச்செடிகள் வைப்பது வீட்டிற்கு வேண்டுமானால் அழகுத்தரும். ஆனால் கட்டடத்தையே பலவீனப்படுத்திவிடும் என்பதை மறவாமல் தூண்களை பலப்படுத்துங்கள்.
நாட்டைக் காப்பாற்றுங்கள்.

நினைவேறுகிறது…