இப்போது பெண்கள் சாதனைகள் புரிந்து, வெற்றிகள் பல பெற்று, ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருகின்றனர். இதில் மாற்றுக் கருத்தில்லை.
எனினும், வளர்ந்து வரும் பெண் சமுதாயம் எங்கோ ஓரிடத்தில் சீரழிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது. அதையெல்லாம் பார்த்தால் பெண்கள் வீட்டிலேயே முடங்கியிருந்திருக்கலாமோ என்ற எண்ணம் கூட தலை தூக்குகிறது.
வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குச் செல்லத் துவங்கிய காலத்தில் பயத்துடனும், பல எதிர்பார்ப்புகளுடனும் அலுவலகத்தில் காலடி வைத்த பெண்களால்தான் சமுதாயமே தலைநிமிரச் செய்தது. தன்னை மட்டுமல்லாமல் தனது குடும்பத்தையும் கட்டிக் காக்கும் கடமை பெண்ணுக்கும் உண்டு. அது பெண்ணாலும் முடியும் என்பதை உறுதிப்படுத்தியது.
அப்போது பெண்களுக்கு இருந்த மனோ தைரியம், தற்காப்பு நிலை, பொது அறிவு எல்லாம் மிகக் குறைவு தான். ஆனாலும் பெண்கள் தடம் மாறாமல் தங்களுக்கான வழியில் நிதானமாக பயணித்து வந்தனர்.
படிப்படியாக தங்களது திறமைகளை வளர்ப்பதற்கேற்ப
பணி உயர்வு, ஊதிய உயர்வு என்று அவர்களது வாழ்க்கை அமைதியான நீரில் துடுப்புப் படகு போல் அழகாகச் சென்று கொண்டிருந்தது.
ஆனால் தற்போது வாய் நுனியில் ஆங்கில அறிவு, ஏதோ ஒரு பெரிய தனியார் கல்லூரியில் பெற்ற பட்டம் இவை இருந்தாலே போதும் பிபிஓ போன்ற பல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை. அதுவும் பல நிறுவனங்களில் இரவு நேர வேலை. அதிக சம்பளமும், அவர்களது பணி அழுத்தமும், பணி நேரமும் அவர்களை தடம்புரள வைக்கிறது.
இது எல்லா பிபிஓ நிறுவனங்கில் பணியாற்றும் பெண்களையும் குற்றம்சாட்டுவதாகாது.... (எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற தவறுகள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால்... இங்கு பணியாற்றும் சூழலும், பணிச்சுமையும் தவறுக்கு துணை போகிறது என்பதுதான் கவலைக்குரியது)
வாரத்தில் ஐந்து நாட்கள் பகல் பொழுதெல்லாம் உணவின்றி தூங்கிவிட்டு, இரவுகளில் கண் மூடித்தனமாக கணினி முன் அமர்ந்து பணியாற்றிவிட்டு வீட்டிற்கு வந்து இரவா பகலா என்பதை கூட அறியாமல் ஒரு அன்னிய கிரக வாசி போல வாழ்க்கை. ஐந்து நாள் வேலை முடிந்து 6வது நாளில் அவர்கள் கண் முழித்துப் பார்க்கும்போது பெரும்பாலும் அது இரவு நேரமாகத்தான் இருக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கவும், கையில் இருக்கும் காசை செலவழிக்கவும் ஆணோ பெண்ணோ தனது சக நண்பர்களுடன் எங்காவது ஊர் சுற்ற வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு போவது என்னவோ கிளப்களும், உணவு விடுதிகளும்தான்.
அங்கு ஆண், பெண் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் மது அருந்துவதும், நடனமாடுவதும், நள்ளிரவில் ஊர் சுற்றுவதும் என பல கூத்துகள் அரங்கேறுகின்றன. அந்த சமயங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால்தான் அவர்கள் செய்தது தவறு என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இல்லையெனில் அவர்கள் உலகம் அதுதான் என்று எண்ணி வானில் பறக்கின்றனர்.
பறவைக்கு வானம்தான் எல்லை. ஆனாலும் அது வானத்தைத் தாண்டி பறப்பதில்லை. அதற்கென ஒரு எல்லையை வகுத்துக் கொள்கிறது. ஏனெனில் அந்த எல்லையைத் தாண்டினால் மூச்சுக் காற்றுக் கூட கஷ்டம் என்பதை அது உணர்ந்ததால்தான். ஆனால் இன்றைய பெண்கள் தங்களுக்கு எந்த எல்லையும் இல்லை என்று எண்ணி வானில் உயர உயர பறக்கின்றனர். உயரத்தில் மூச்சுத் திணறி கீழே விழுவது எந்த அளவிற்கு ஆபத்து என்பதை அவர்களாகவே உணரும் வரை.
பெண் விடுதலைக்காகப் பாடுபட்ட பாரதி கேட்ட சுதந்திரம் இப்படி முறைகெட்டுத் திரிய அல்லவே... பெண்களே ஒரு நிமிடம் நாம் சென்று கொண்டிருக்கும் வழி சரியானதா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள். நாம் நம் நாட்டுப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டாம்... நம் வீட்டுப் பாரம்பரியத்தையாவது காப்பாற்றலாமே...
வகைகள்: Blog
2008
நினைவேறுகிறது…