வருட இறுதி வந்துவிட்டாலே தீபாவளி, கிறிஸ்மஸ் என ஒரே குதூகலம்தான். அதிலும் வருடப் பிறப்பு என்பது இன்னும் சொல்லவே வேண்டாம். அது முடிந்தால் பொங்கல் என விடுமுறை நாட்களும், கொண்டாட்டங்களும் நீண்டு கொண்டேத்தான் செல்கின்றன.
மனதிற்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தரும் வகையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகளை வேறொரு வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி?
பண்டிகை வாழ்த்து என்பது நமக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர், ஓரிரு முறை பரிச்சயம் ஆனவர் மட்டுமல்லாமல் முன் பின் தெரியாதவர்களுக்குக் கூட கூறலாம். தவறில்லை.
அதையே நாம் நமக்காக பயன்படுத்திக் கொண்டால் என்ன? நாம் நேசிக்கும் (ஆனால் அவரிடம் காதலை சொல்ல தயக்கம் இருந்தால்) ஒருவரிடம் புத்தாண்டு அல்லது பொங்கல் வாழ்த்துகளை கூறி அவர்களுடனான உறவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நல்ல நண்பர்களாக அல்லது உறவினர்களாக இருந்து சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக பிரிந்திருப்பவர்களாக இருப்பின், வாழ்த்துச் செய்தியின் மூலம் உங்களது உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
சண்டையும் இல்லை சந்திப்புகளும் இல்லை என்று ஒரு சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்களுடனான தொடர்புகளை நீடித்துக் கொள்ளவும் இந்த பண்டிகை வாழ்த்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களது வாழ்த்துக்களை அனுப்ப மறக்காதீர்.
ஒரு சில இடங்களில் விட்டுக் கொடுத்துப் போனால் பல விட்டுப்போன உறவுகள் தட்டிக் கொடுத்து பின்னால் வரும்.
வாழும் நாள் ஒன்றே. அதை சரியாக அமைத்துக் கொள்ளுங்கள், தவறினும் அந்த நாளை திருத்திக் கொள்ள இயலாது. அதற்கு ஒரு வாய்ப்பு கிட்டாமலும் போகலாம். எனவே வரும் நாளை சரியாக அமைக்க முயற்சிப்போம். மீண்டும் சந்திப்போம்.
வகைகள்: கட்டுரை
2008
நினைவேறுகிறது…