ஒன்று எனது நண்பனுடைய திருமணம்... மற்றொன்று உறவினர் (பணக்கார உறவினர்) திருமணம்.
முதலில் என் நண்பனுடைய திருமணம்... மிக மிக சிறப்பாய் நடந்து முடிந்தது. நாங்கள் திருமண வீட்டிற்குள் சென்றதுமே வாங்க வாங்க என்று அழைத்து பூ, சந்தனம், கற்கண்டு எடுக்கச் சொல்லி மேலே திருமண பந்தலுக்கு வழிகாட்டினர்...
அங்கு படிகட்டு ஏறி முடியும் முன்பே நண்பனின் அம்மா இவ்வளவு லேட்டாவா வர்றது என்ற செல்ல கோபத்துடன் எங்களை வரவேற்று அமர வைத்தார்.
அங்கு யாருக்கும் எங்களைத் தெரியாது என்றாலும் அப்படியில்லை என்பதுபோல் தான் அங்கிருந்தவர்கள் நடந்து கொண்டார்கள். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு அவனிடம் பரிசுப் பொருளையும் கொடுத்து சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் கூறி விடைபெற்று வந்தோம்.
இதே தான் மறுநாள் முகூர்த்தத்திற்கும் நடந்தது. ஆனால் அன்று இன்னும் கொஞ்சம் அதிகமாகப் போய் நண்பனின் அம்மா என்னையும் என் கணவரையும் அவர்களது உறவினர் அனைவருக்கும் என் மகனின் நெருங்கிய தோழி என்று அறிமுகம் செய்து அசத்தினார்.
இது மன நிறைவைத் தந்த திருமணம்... மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினோம்..
அன்றிலிருந்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து உறவினர் திருமணம்....
மிகப் பெரிய மண்டபம்... சிறப்பான ஏற்பாடுகள்... என மண்டபமே கலகலத்துக் கொண்டிருந்தது. எங்களது குடும்பத்துடன் சென்றோம்... வாசலில் மிக விலை உயர்ந்த அருமையான மலர்கள்... ஆனால் வாங்க என்று வரவேற்கவோ கொடுத்து உபசரிக்கவோ ஆளில்லை. அதற்காகவே அதை யாரும் நெருங்கவில்லை என்று தோன்றியது... நாங்களும் அது போலவே உள்ளே சென்றோம்.
ஒரு சிலர் எங்களை ஏதோ சினிமா தியேட்டரில் சீட் காண்பித்து உட்கார வைப்பது போல் அங்கே போங்க.... இங்கே போங்க என்று அமர்த்தினர்.
அங்கிருந்தவர்கள் அனைவருமே உறவினர்கள் தான்... தெரிந்த முகங்கள்தான்... ஆனால் எந்த சலனமும் இல்லை... யாரிடமும்... அவர் வந்து பேசட்டுமே... நாம் ஏன் செல்ல வேண்டும்... என்று ஒவ்வொருவரும் மனதில் நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
சில நொடிகளில் தாலி கட்டி முடிக்கப்பட்டது. எல்லோரும் சென்று உணவருந்தி அங்கிருந்து அப்படியே வீட்டிற்கும் சென்றுவிட்டோம்.
பின்னர் மாலையில் ரிசப்ஷன் வேறு... அதில் கூட்டம் அலை மோதியது. பெரிய பெரிய பாடகர்கள் வந்து பாடினர்... பரிசுப் பொருட்களைக் கொடுக்க நீண்ட வரிசையில் நின்று பரிசுகளைக் கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அதன் பின்னர் உணவு.. அங்கும் பெரிய கூட்டம்... சாப்பிட்டு முடித்து தாம்பூலம் வாங்கி வரும் வரை ஏதோ இயந்திர மனித குலத்தில் பிறந்து வளர்ந்தது போன்றொரு எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இதில் திருமணம் நடத்தியவர்களில் ஒருவரும் யாரையும் வரவேற்கவும் இல்லை... உபசரிக்கவும் இல்லை.
இதுதான் இவர்கள் மரபு என்று மனம் நொந்ததுதான் மிச்சம்.

நினைவேறுகிறது…
மறுமொழிகள்